Sunday 18 December 2011

சங்கரன் எனும் மாமனிதன்


எனது பணியின் காரணமாக என்னைத் தொடர்பு கொள்பவர்கள் அதிகம் பேர்..அவர்களில் என்னை நினைவு வைத்துக் கொண்டே இருப்பவர்கள் குறைவு.

அவர்களுக்கு அவர்களது Curriculum Vitae க்குத் தகுதியானதொரு வேலையினை அமர்த்திக் கொடுத்தவன் எனும் ரீதியில் சந்தோஷமும், நினைவுகளின் ஏதாவது ஓரத்தில் சில சதவீதங்கள் நன்றியும் இருக்கலாம்.. நானில்லாவிட்டால் இன்னொருத்தர் அந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம்

சில வருஷங்களுக்கு முன்பு ஒருவர் ... Phone ல் கேட்டார்

'என் பெயர் சங்கரன். உங்களை சந்திக்க விழைகின்றேன் அப்பாய்ன்ட்மென்ட் கிடைக்குமா"

சராசரியானதொரு உயரம்.. என்னைப் போன்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஒல்லி. சிரித்த முகம்.. சிரிப்பிற்கிடையில் போனால் போகிறதென வார்த்தைகளைச் சேர்த்துக் கொண்ட உரையாடல். முதல் சந்திப்பில் ஒரு கேண்டிடேட்டை அணுகும் மனித வள மேம்பாட்டுத்துறை ஆசாமியாகத் தான் நானிருந்தேன். ஆனால் அவர் அப்படியில்லை.

அவரது அந்த முதல் கரிகுலம்விட்டே இன்றைக்கும் என் மெயில் பாக்ஸில் இருக்கின்றது.. அதன் பிறகு அவருக்கு பணி வாய்ப்புகளுக்கு தகுதியாக அந்த கரிகுலம்விட்டேயினைப் பட்டை தீட்டிக் கொடுத்திருக்கின்றேன். அதெல்லாம் கடந்து என் குடும்பத்தில் ஒருவர் போல மாறினார் சங்கரன்

நான் மாற்று வேலைக்காக ஒரு முறை கேண்டிடேடாக நேர் காணலுக்கு சென்ற் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, " இத்தனை வருஷம் .. நீங்கள் இந்தத் துறையில் இருக்கின்றீர்கள்.. நீங்கள் என்ன காரியத்தினை மிகவும் பெருமையாக நினைக்கின்றீர்கள்"
"தான் வேலை மாற்றத்தினை விரும்புவதாகவும், நல்ல வாய்ப்பு வந்தால் அதனைத் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டு ஒருவர் என்னிடம் கேண்டிடேட்டாக வந்தார்.. ஆனால் அவர் இன்றைக்கு மிக நெருங்கிய நண்பராக , ஏன் ஒரு சகோதரர் போல ஆகிவிட்டார்.. இதனை எனது பழகும் தன்மைக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்"

"இதென்னங்க பிரமாதம் இது எல்லாருக்கும் ஃப்ரென்ட் கிடைக்கின்ற மாதிரி தானே"

"எனது தந்தை 2008 ல் நவம்பர் 3 ம் தேடி அதிகாலை 2.30 மணிக்கு பேச்சு மூச்சு இல்லாமல் நினைவிழந்த போது.. நான் முதலில் அவரைத் தான் துணைக்கு அழைத்தேன்.. எனது வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் தூரம் அதிகம்.. நேரமோ அகால நேரம்.. ஆனால் அவர் மனைவியுடன் என் இல்லத்துக்கு வரும் போது மணி 3.30.. ஆஸ்பத்திரிக்கு செல்வது, அங்கே அதன் அவசரங்களைச் சமாளிப்பது இதை அனைத்தினையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்.. அவர் மனைவி எங்கள் வீட்டில் இருப்பவர்கள் யாரையும் சமைக்க விடாமல் தானே எல்லாவற்றையும் செய்து கொடுத்தார்.. சங்கரன் அப்போது பன்னாட்டு வங்கி ஒன்றில் மிகவும் முதுநிலைப் பொறுப்பில் இருந்தார்.. எனக்காக 10 நாளும் லீவு போட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கும் இன்ன பிற இடங்களுக்கும் அலைந்தார். எனது தந்தையின் மரணத்தின் போதும் அவர் தான் எல்லாவற்றிற்கும் அலைந்தார்; ஆஸ்பத்திரியின் ஆரம்ப நாளை நினைத்தால் என் கண்களில் நன்றிப் பெருக்கில் நீர் தளும்ப நிற்கிறது’

என்னைக் காட்டிலும் என்னை இன்டெர்வ்யூ செய்தவருக்கு சங்கரனை மிகவும் பிடித்துப் போனது போலும்.. அந்த இன்டெர்வ்யூவில் நான் தேர்வாகவில்லை என்பது தனி சங்கதி
ஆனால் என்னை இன்டெர்வ்யூ செய்தவர் என்னை அடிக்கடி தொடர்பு கொண்டே இருந்தார்..

இரண்டு நாட்களுக்கு முன்னால் என்னை போனில் அழைத்தார்.

"மௌளீ எப்படி இருக்கீங்க.. மிஸ்டர் சங்கரன் எப்படி இருக்கிறார்"

"எப்போதும் போல மாமனிதனாக இருக்கிறார் சார்"

"நீங்க சொல்வதையெல்லாம் வைத்துப் பார்த்தால் I think you owe him a lot and you could not repay him”

"ஆமாம் சார்.. என்னால் திருப்பித் தர இயலவே இயலாது.. சின்ன ஆசையுண்டு.. அவரைப் பத்தி உங்க கிட்ட சொன்ன மாதிரி இன்னும் நிறைய பேரிடம் சொல்லனும்னு"

அந்த ஆசையினை இன்றைக்கு ஓரளவு பூர்த்தி செய்து கொள்கிறேன்

நட்பை நட்பு கொண்டே சொல்லிக் கொடுத்த சங்கரன் எனும் மாமனிதன்

திருப்பாவைத் திறன்

இதனை மார்கழி தொடக்க நாளில் எழுதிட வேண்டும் என்றே குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன். நேற்றைக்கு முதலியார் குப்பம் படகு சவாரி, ஆலம்பாறைக் கோட்டை, மாமல்லபுரம் என குடும்பத்துடன் சென்றபடியால் ஒரு நாள் தாமதம்.

இறை நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேச்சுக் கொடுப்பதில் அனுகூலங்களும் இருக்கத் தான் செய்கின்றன‌

சில வருடங்களுக்கு முன்பு இப்படியாக ஒருவரிடம் உரையாடும் சந்தர்ப்பத்தில், பேச்சு பெரியாழ்வார் குறித்தும், அப்படியே ஆண்டாள் குறித்தும் திசை கொண்டது.

ஆண்டாளின் "மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்" எனும் வைராக்கியத்தை அவர்," ஏங்க நான் கடவுளைத் தான் கலியாணம் செய்து கொள்வேன் என்பதாக ஒரு பொண்ணு சொன்னா, அவங்க அப்பா அதை நினைத்து பெருமைப்படுவாரா.. நானாயிருந்தா டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போவேன்" என்று சொல்லிவிட்டு, என்னை மூலையில் மடக்கிக் கொண்டுபோய் நிறுத்திவிட்டு , அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர முடியாது அஸ்திரத்தால் கட்டி வைத்து விட்ட சந்தோஷத்துடன் சிரித்தார்.

அவரிடம் இனிமேல் இந்த சப்ஜெக்டில் பேசும் போது, அவர் என்னைக் கட்டிவைத்த அஸ்திரங்களைச் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட பின்பு தான் பேசணும் என நினைத்துக் கொண்டேன்

வருடங்கள் சில கடந்தன, நான் அந்த சப்ஜெக்டை மறக்காமல் அஸ்திரங்களைக் கட்டுடைக்க அவ்வப்போது தேடிப் படித்துக் கொண்டிருந்தேன்

எனது முயற்சியின் போதாமை காரணமாக் என்னால், ஆண்டாளின் பாசுரங்களில் Bridal Mysticism, Austerity , Apocryphal என்ற அளவிலேயே சுற்றிக் கொண்டிருந்தேன்.

பெருமாளுக்கு, என்மீது விஷேஷ ப்ரீதி இருக்கின்றதென நினைக்கின்றேன்.

வெள்ளிக் கிழமை 9 டிசம்பர் 2011, ஆபிசில் வழக்கமான வேலைகளில் இருந்தேன்.. பகல் சுமார் 2.30 மணியிருக்கும்.. போனில் என்னை இறையன்பு அவர்கள் அழைத்தார்.

"மௌளீ.. கடைசி நேரத்தில் அழைக்கின்றேன் என தவறாக நினைக்க வேண்டாம்.. நாளை மாலை தி. நகர், பி.டி தியாகராசர் மன்ற அரங்கில் , எனது புத்தகங்கள் வெளியீட்டு விழா இருக்கின்றது.. நீங்க அவசியம் கலந்து கொள்ள வேண்டும். விழா 5.30 மணிக்கு.. உங்களை 5.00 மணிக்கே எதிர்பார்க்கின்றேன்"

இதே வருஷம் மே மாதம், நான் காஞ்சிபுரத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். காமாட்சி கோவிலில் அன்றைக்கு கூட்டம் அதிகம் என்பதாலும், அதில் முண்டிச் செல்வதில் எனக்கு இருக்கும் சாத்தியங்களை ஆராய்ந்து பார்த்துவிட்டு , குடும்பத்தினரை மட்டும் உள்ளே போகச் சொல்லி விட்டு, நான் காரிலேயே இருந்த போது இறையன்பு அவர்கள் என்னை அழைத்தார்.

அவர் முதன் முதலில் என்னிடம் பேசின சந்தர்ப்பம். என் பதிவுகளை அவர் படிக்கின்றார் என்பதில் தொடங்கி, அவற்றில் அவர் விரும்பிப் படித்த சிலவற்றை குறிப்பிட்டு பேசினார். அதன் பின்பு பல முறை என்னிடம் பேசி எனது பதிவுகள் குறித்துப் பேசி எனக்கு ஊக்கம் தந்திருக்கின்றார்.

10 டிசம்பர் 2011 என்னைக் கட்டி வைத்திருந்த அஸ்திரங்கள் செயலிழந்த நாள்.

புத்தக வெளியீட்டு விழாவுக்கு 4.30 மணிக்கே சென்று விட்டேன்.. வாசலில் நின்று எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.. நான் தான் இன்னார் என்று சொன்னபோது மிகவும் சந்தோஷமாக வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்.

அவரது புத்தகங்கள் காட்சிக்கு வைத்திருந்தார்கள்

நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் , திருப்பாவைத் திறன், Ancient Yet Modern ; Management Concepts in Thirukkural என்ற புத்தகங்களை வாங்கி, அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டு அரங்கத்துள் சென்று அமர்ந்தேன்..

விழா தொடங்க இன்னும் நேரமிருக்கின்றது.. கையிலோ புத்தகங்கள்

மாபெரும் இயற்கையாக கண்ணனைக் கண்டாள் ஆண்டாள் என்பதை, எப்போதும் போல தகவல்கள், சுவாரசியங்கள், புதிய சிந்தனைத் தூண்டல் என்பதாக பல தளங்களில் பயணித்து இறையன்பு சொல்லி, என்னை பலவருடங்களாக கட்டியிருந்த அஸ்திரத்தின் கட்டவிழ்த்தார்
காலை உணவை ஏன் சாப்பிடுகின்றீர்கள் என்ற வியட்நாமின் புத்த துறவி Thích Nhat Hạnh குழந்தைகளைக் கேட்ட கேள்வி போல, நண்பர் ஒருவர் வால்டேருடன் நடத்திய உரையாடல் போல ... நான் சொல்லிக் கொண்டே போகலாம்.

மார்கழியின் மூன்றாம் நாள் (நாளைக்குத் தான் இந்த வருஷத்து மார்கழியின் மூன்றாவது நாள்) பாடும் கோதையின் ,

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!

எனும் பாசுரத்தினை அனுபவிக்கும் இறையன்பு அவர்கள் ஆண்டாளின் பாடல், தனியொரு மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் அவாவில் பிறக்கவில்லை என்பதை சொல்லி,, அதனையே புத்தகம் முழுவதும் சொல்லியிருக்கின்றார்

பக்தி என்பது லீவு நாளில் கார் எடுத்துக் கொண்டு கோவிலுக்குப் போகின்றதென்பதான ஒரு பயணத்தினைக் குறிப்பது அல்ல..

எம் எஸ் சுப்புலஷ்மி அவர்களின் பஜ கோவிந்தம் இசைக் தட்டில் முகவுரையில் , ராஜாஜி சொல்வார், When Knowledge become fully matured it becomes Bakthi.. இதனை மிகவும் எளிமையாக புரிய வைக்கின்றது திருப்பாவைத் திறன்

Sunday 4 December 2011

சனிக்கிழமை 03 டிசம்பர் 2011 அடுத்த பாதி

முந்தைய தலைமுறை பாரதி மணி அவர்களைச் சந்தித்த பின் வீடு வந்து, மதிய சாப்பாடு, வார விடுமுறை நாள் தூக்கம் அதன் மத்தியில் கரண்ட் கட் , எலெக்ட்ரிசிட்டி போர்ட்டை மனதாரா வாழ்த்திக் கொண்டு.. கடந்து சென்ற மதிய நேரம்..

எனது தலைமுறைக்கு அடுத்த தலைமுறையில் எங்கள் குடும்பத்தில் கலியாணங்கள் வரிசையாக நடக்கத் தொடங்கியுள்ளன.. அதில் ஒன்றின் ரிசப்ஷனுக்கு செல்வதற்காக கிளம்பினேன்.

மௌண்ட் ரோடில் நிறைய வரவேற்பு பளபளப்புகள்.. கனிமொழி ஜாமீனில் வந்து சென்னை வருகிறார் என்பதை சென்னையில் எல்லோருக்கும் தெரிவிக்கும் விசுவாச ஊழியத்தினை இரண்டு பேர் குத்தகை எடுத்திருக்கின்றார்கள் போலும்.. அவர்கள் பெயர் தாங்கி.. வித விதமான காப்ஷனுடன்..

அந்த பேனர்களைப் பார்ப்பவர்களில் பலருக்கு என்ன மாதிரி உணர்ச்சிகள் உருவாகும் என்பது தெரிந்திருக்கும்.. இதனையும் தாண்டி இது மாதிரி பேனர்கள் வைப்பதன் சைக்காலஜி என்னவென்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே.. சாலை கடக்கும் பாதசாரிக் கூட்டம் என்னைக் கவனிக்க வைத்தது

இந்த பெடஸ்ட்ரியன்ஸ் அந்த அந்த இருப்பிடங்களின் கலாச்சார அடையாளம் என ஒரு சித்தாந்தம் வைத்திருக்கின்றேன்.. அந்தக் கூட்டத்தைக் கவனிப்போம்.

பலர் செல்போனில் பேசியபடியே கடக்கின்றனர். பொதுவில் எல்லோருக்கும் அடுத்து சிவப்பு விழுவதற்குள் ரோட்டின் அந்த் மூலையினை அடைந்து விட முடியும் என்கிறதான் தீர்மானம் அவர்கள் நடையின் நிதானத்தில் தெரிகிறது; எல்லா சிக்னலிலும் கடந்து செல்பவர்களில் இரண்டு பேராவது கர்ப்ப ஸ்திரீக்களாக இருக்கின்றனர். அப்படியானவர்கள் கூட நடந்து வருபவர்களிடம் பேசுவது சிக்னலுக்கு காத்திருக்கும் போது முன்வரிசை கிடைக்கும் போதெல்லாம் கேட்கிறது.. அந்தப் பேச்சுகளில் அவர்களின் மத்திய தர வாழ்க்கை இருக்கின்றது.. அவர்கள் அரசியல் பளபள பேனர்களை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதில்லை

அந்தப் பெண்களின் உலகத்தில் சம்பந்தப்பட்ட எல்லா அம்சங்களும் உடன் வேலை செய்யும் சகாக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.. இந்தப் பகிர்தலின் காரணமாக உசுப்பேத்துதல் , ஆறுதல் செய்வது என இரண்டும் கலந்தே இருக்கின்றன.. இந்த மாதிரியான வாழ்க்கைச் சூழல் கொண்ட டிவி நாடகங்கள் சக்கை போடு போடுகின்றன.. இந்த நாடகங்களின் புரவலர்களாக சோப்பு, ஷாம்பு, பைனாஸ், கூல் டிரிங்க்ஸ் ... இத்தியாதி இத்தியாதி கம்பெனிகள் இருக்கின்றன‌

ஆறு மணிக்கு மேல் சிக்னல் முன் வரிசையில் ஸ்கூல் யூனிபார்ம், மிகவும் லகுவான எடை கொண்ட சைக்கிளில் விழப்போகும் பச்சைக்கு காத்திருந்து , அந்தக் காத்திருப்பில் பக்கத்து சைக்கிள் சகாவிடம் சச்சின் டென்டுல்கர் , மஹேந்திர சிங்க் தோனி எனப் பேசும் பசங்கள் ட்யூஷன் முடிந்து திரும்புகிறார்கள்

கோட்டூர்புரம் ரிவர் வ்யூ ரோடில் இருக்கிறது அந்த கலியாண மண்டபம்.. நான் போவதற்குள் கையில் பளபள் பேப்பர் சுற்றி சின்னதும் பெரிசுமாய் டப்பாக்களை வைத்துக் கொண்டு, கிஃப்ட் தந்துவிட க்யூ கட்டிக் கொண்டிருந்தார்கள்

நடப்பது எனது பெரியப்பா மகளின் மகனின் திருமண ரிசப்ஷன் என்கிறதான் ப்ரத்யேக சலுகை எடுத்துக் கொண்டு மேடையேறி, சுள் சுள் என அவர்கள் போட்டோ வீடியோ எடுக்க திரும்பி வந்து இரண்டாம் வரிசை நாற்காலியில் அமர்ந்தேன்.

எனது சொந்தக்காரர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு இரண்டு சங்கதிகள் நன்றாகத் தெரிந்திருக்கின்றது

"ஏன்டாப்பா நீ என்னமோ ப்ளாக் எழுதிண்டு இருக்கியாமே"

"சுகர் கண்ட்ரோல்ல இருக்கோல்லியோ"

சில சொந்தங்கள் எத்தனை வருஷம் கழித்துப் பார்த்தாலும் ஒரே மாதிரி உடல்வாகு கொண்ட்வர்களாக இருந்தார்கள்

சிலருக்கு அந்த லாவகம் கை கூடவில்லை என்பது உத்திரவாதமாகத் தெரிந்தது.. அவர்கள் நடந்து வரும்போது சுவற்றுக்கும், சைடில் முதல் நாற்காலி வரிசைக்கும், இடையிலான அகலம் போதவில்லை.. நாற்காலிகளை வரிசையாக நகர்த்திக் கொண்டே வந்து,

"நீ மதராசிலே தான் இருக்கியான்னே சந்தேகமாக இருக்கு.. எங்காத்துக்கல்லாம் வரதேயில்லை " என புகார் படிக்கின்றார்கள்.. போனால் போகிறதென அவர்கள் வசிக்கும் பிராந்தியத்திற்கு சென்னை பின்கோடு வரிசையில் இடம் தந்திருக்கின்றார்கள் எனச் சொன்னால்
"சோழிங்க நல்லூர் என்ன அத்தனை தூரமா” என்றும் கேட்கின்றார்கள்

"ஏம்பா மொபைல் நம்பர் மாத்திட்டியா"

"இல்லையே மாமா.. நான் இன்னும் ரென்டு ஜென்மாவிற்கு ஏர்டெல் கம்பெனியாருடன் ஒப்பந்தம் போட்டிருக்கேன்.. ஆமா என்னோடதுன்னு நீங்க என்ன நம்பர் வச்சிருக்கீங்க"

இந்தக் கேள்விக்கு பதில் தேடிப் போன மாமா நான் மண்டபத்தை விட்டு கிளம்பும் வரை காணவில்லை

ஏகதேசம் போன வருஷத்தில் இது போன்றதொரு முகூர்த்த சீசனில் கலியாணம் செய்து கொண்டவர்கள், புதுசாக பிறந்த நாட்கள் / சில மாசங்கள் வயதே உடைய தங்கள் புதுகுழந்தைகளை வீட்டில் பெரியவர்களிடம் விட்டுவிட்டு வந்திருக்கின்றார்கள் . ஆனால் நீலக் கலரில் டர்க்கி டவலில் சுற்றி, பொக்கை வாய் சிரிப்பை தங்கள் ப்ளாக்பெர்ரியில் பத்திரப்படுத்தி, வயதான பெரியவர்களிடம் காட்டி சந்தோஷப்படுகிறார்கள் & சந்தோஷப்படுத்துகிறார்கள்

எழுபது வயது கடந்து, இது போன்றதான் சந்தர்ப்பங்களில் கலந்து கொள்பவர்களிடம் இருப்பதான் பொதுத் தன்மையினை உணரமுடிகின்றது.. நேரடி, ஒன்று விட்ட என்பதான் மிகப்பெரிய பேரக்குழந்தைகளின் சாம்ராஜ்யத்தில் எல்லா இளவரசர்களையும் இளவரசிகளையும் பார்த்துப் பேசி அவர்கள் கைபிடித்து ஆசிர்வதிக்கின்றார்கள்

கனகாரியமாக என்னிடம் மெயில் ஐடி வாங்கும் சொந்தங்கள், அதைத் தொலைத்துவிட்டு, அடுத்த ரிசப்ஷனுக்கு அதே கேள்வியை பத்திரமாக ரிசர்வ் செய்து வைத்திருப்பார்கள்

நின்று கொண்டே சாப்பிடும் இந்த பஃபே நாகரீகம் எனக்கு ஒத்து வருவதில்லை.. அங்கே இருக்கும் சொற்ப நாற்காலிகளுக்கும் சீனியர் சிட்டிசன் எண்ணிக்கைக்கும் சம்பந்தமேயில்லை

முகலாய கிட்சன்அடையாளங்கள், இது போன்ற விருந்துகளில் நுழைந்து விட்டதை கவனிக்க முடிகின்றது

ருமாலி ரொட்டி...

இந்த ரொட்டிக்கும் டிஷ்யூ பேப்பருக்கும் அதிக வித்தியாசம் தெரிவதில்லை..

அநியாயத்துக்கு மெல்லிசாக இருக்கும் இந்த ஐட்டத்தினை மட்டும் சாப்பிட்டு பசியாறி விட்டதாக ஒரு மாமி சொல்லிக் கொண்டிருந்தார்

வீட்டுக்கு வந்த உடன் மனைவியிடம் கேட்டேன்.. அடுத்த ரிசப்ஷன் என்னிக்கு

Saturday 3 December 2011

சனிக்கிழமை 03 டிசம்பர் 2011 முதல் பாதி

தினசரி காலையில் டிபன் சாப்பிடும் போது, டிவி ஆன் செய்து கலைஞர் டி வி சானலை வைத்து விடுவாள் என் மனைவி. அது ஒன்று சுப.வீ.பா நிகழ்ச்சியாக இருக்கும் அல்லது தேனும்பாலும் என்ற சினிமா பாடல் நிகழ்ச்சியாக் இருக்கும்.. இன்றைக்கு தே.பா

கமல், ரஜினி படங்களில் இருந்து கலர் கலராக பாடல்கள்.. பாடல்களில் ஒரு பொது அம்சங்கள் இருந்தன.. தரையெங்கும் கண்ணாடி.. அவற்றின் பின்னாலே பச்சை , சிவப்பு, மஞ்சள் என விளக்குகள்.. இப்படி அப்படி எரிந்து கொண்டிருந்தன.. லோகத்தில் இருக்கும் அனைத்து ஜிகினாக்களையும் சேகரித்துக் கொண்டு வந்து நடன மங்கைகளின் உடைகளில் பொருத்தி ஆடவிட்டிருந்தார்கள்.. அந்த மங்கைகளில் சிலருக்கு மட்டும் க்ளோசப் பாக்கியம் கிடைத்திருந்தது.. சிலருக்கு முகம் க்ளோசப்பில் காட்டப்படவில்லையென்றாலும், குனிந்து நடனமிடுவது போல் காட்சி அமைத்து, அவர்களே சொற்ப துணியில் ரவிக்கை போன்றதான ஒன்றினைக் கொண்டுமறைத்து வைத்திருக்கும், மேலழகினை காமிராவுக்கு சில மில்லி மீட்டர்கள் சமீபத்தில் கொண்டு வந்து விலக்கிப் போனார்கள்


நாயகர்களாகப்பட்ட ரஜினி / கமல் உடன் ஆடும் இரண்டு நடன மாதுக்கள்.. அவர்களின் காஸ்ட்யூமில் வித்தியாசம் இருந்தது.. இன்ன பிற நடன மாதுக்கள் அணிந்திருக்கும் துணியின் மொத்தப் பரப்பில் சுமார் 70 சதவீதம் கழிவு செய்து இவர்கள் துணி அணிந்திருந்தார்கள்.. இவர்களுக்கு இரண்டு விதமான க்ளோசப் பாக்கியங்களும் அனுக்கிரஹம் ஆகியிருந்தன.
ஏதாவது ஒரு காஸ்ட்யூம் மாறும் சந்தர்ப்பத்தில் ரஜினி / கமல் ப்ரௌன் கலரில் தோலினாலான வஸ்திரம் தரித்து அபத்தமாக ஆடினார்கள்.. பின்னனிக் குரல் மலேசியா வாசுதேவன்,, இல்லெயன்றால் கட்டைக் குரலில் எஸ் பி பாலசுப்ரமண்யன்..

இப்படியாகப் போய்விடுமா நாள்.. இல்லை இல்லை

உங்களைப் பார்க்க விரும்புகிறேன்.. என்பதான் அந்த செலிபிரிட்டியின் அழைப்பினை ஏற்று இன்றைக்கு சென்று பார்த்து வரலாம் என நினைத்து அவருக்குப் ஃபோன் செய்தேன்.. இடம் தெரிந்து கொண்டேன்

கே. கே நகர் வழியாக விருகம்பாக்கம் செல்லும் மார்க்கத்தில் எல்லா ரோடும் குறைந்த பட்சம் 80 அடி விஸ்தீரணம் இருக்கின்றது.. அதிலே சினிமாவுக்கு அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு உபயோகம் ஆகும் வாகனங்கள்.. சாஃப்ட்வேர் கம்பெனியில் ஊழியம் செய்பவர்களை காலையில் கவர்ந்து சென்று அகால நேரத்தில் இறக்கிவிடும் கம்பெனிப் பேருந்துகள்.. வடியாமல் இருக்கும் மழைத் தண்ணீர்.. அதற்குள் நின்று கொண்டிருக்கும் ஆட்டோ.. ஹெல்மெட் வியாபாரிகள்.. திராவிட / காங்கிரஸ் கட்சிகளில் தலைவர்கள் நினைவாக எழுப்பப்பட்டுள்ள் பஸ் பயணியர் நிழற்குடை.. ரோடு போட்டுவிடுவார்கள் என்பதான அபத்த நம்பிக்கையூட்டும் தார் கலக்கும் எந்திர வாகனங்கள்.. அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்பதாக ஜெயலலிதாவுக்கு வயசாகி விட்டதை நினைவுபடுத்தும் பளபள பேனர்கள்.. என்பதான பல ரூப ஆக்கிரமிப்புகள் போக என்பது அடியில் எட்டு அடிதான் வாகன போக்குவரத்துக்கு மிச்சமிருக்கின்றது..

அதிலே மிகுந்த கனத்த ஆகிருதி கொண்ட என்னைப் போன்ற ஆசாமிகளைச் சுமந்து கொண்டு 90 சி.சி ஸ்கூட்டர் சுலபமாகப் போய் வரலாம்..

அந்த தெருவின் மொத்தமான சொற்ப அகலத்தில் 60 சதவீதம் எதற்காகவோ முந்தின இரவு தோண்டப்பட்டிருந்தது.. அதனை இன்றைக்கு காலையிலே அப்டேட் செய்திருந்த கூகிள் மேப்ஸை வியந்து கொண்டேன்..

இரண்டாவது மாடியில் வீடு.. காலிங் பெல் அடித்தேன்..

வாங்க மௌளீ என்று சொல்லி உள்ளே அழைத்துப் போனார்.. பாரதி மணி சார்

சுமார் இரண்டு மணி நேரம்.. பேசிக் கொண்டிருந்தோம்..

பொதுவில் எனக்கு என்னிலும் வய்தானவர்கள் தான் நட்பு வட்டத்தில் ஜாஸ்தி.. ஆனால் அவர்களில் யாரும் என் தந்தை வயதுக்கு இருந்ததில்லை. எனக்கு முந்தைய தலைமுறையின் ஒருவரால் என்னை இப்படி வசீகரமாகப் பேச்சினைக் கவனிக்க வைக்க இயலும் என்பதை இத்தனை சமீபத்தில் அமர்ந்து கேட்பது என்பது அபூர்வமானதொரு சந்தர்ப்பம்

அப்போதைய சி. என் அண்ணாதுரை எம்.பி ஆக இருந்த போது, "மணி ஒரு நல்ல ஐயர் ஹோட்டலாக அழைத்துப் போங்க. காஃபி சாப்பிடணும்'னு சொன்னாராம்
இவரும் அவரை கரோல்பாக்கில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு சொன்னாராம், "இந்த ஹோட்டல் அய்யர் ஹோட்டல்.. ஆனால் அவர் நல்ல ஐயரா இல்லையானு எனக்குத் தெரியாது"னு சொன்னாராம்

இப்படி சொல்லும் போது அவரே தயாரித்த காஃபியினை எனக்கு தந்துவிட்டு சொன்னார்.

அவரது டெல்லி வாழ்க்கை, நாடகங்கள், அவரது பெர்சனல் வாழ்க்கை, சமைக்கும் திறமை,, மிகக் குறிப்பாக ஆவக்காய் ஊறுகாய், பைப்பில் திணிக்கப்படும் பல நாட்டு புகையிலை, அவரது மாமனார் பெரியவர் கா.நா.சு அவர்கள் , இன்னும் பல புத்தகங்கள், நாஞ்சில் நாடன் வந்து தங்கியிருந்தது என சஞ்சரித்து இன்னும் மிச்சமிருக்கின்றது என சொன்னாலும்..

நான் கிளம்பலாம் என யத்தனித்தேன்..

தனது ம்யூசிக் கலெக் ஷனில் இருந்து மதுரை மணி அய்யரை விட்டு என்னை நகரவிடாமல் செய்தார்.

நீளமானதொரு ஆலாபனை இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே இன்ன ராகம் என கேட்பவ அடையாளம் காணத்தக்க்தாய்ப் பாடும் அபார மேதமை மதுரை மணி அய்யருக்கு உண்டு

ஸ்ரீ ரஞ்சனி

ஸொக ஸுகா ம்ருத ங்க தானமு ஜத கூர்ச்சி நிநு
ஜொக்க ஜேயு தீ ருடெ வ்வோடோ
நிக மசிரோர்த் த்த மு கல் நி க‌
நிஜவாகுலதோ ஸ்வரசு த முதோ
யதி விச்ரம ஸத் ப க்தி வி
ரதித் ராஷாரஸ நவரஸ‌
யுத க்ருதிசே ப ஜியிஞ்சே
யுக்தி த்யாகராஜூநி தரமா ஸ்ரீ ராமா

வேதங்களின் முடிவாகிய உபநிஷதங்களின் பொருள் நிறைந்து உண்மையான வாக்குடன் ஸ்வரசுத்தத்துடன் சொகுசாக ம்ருந்தங்க தாளம் சேர்த்து உன்னை மயங்கச் செய்யும் தீரன் எவனோ

எதுகை , விச்ரமம் ( ஓய்வு), உத்தம பக்தி, பத வாக்கியங்களின் முடிவில் விச்ராந்தி, திராட்சையின் ருசி, நவரசங்கள் இவற்றுடன் கூடிய க்ருதிகளால் உன்னை பஜனை செய்யும் சாமர்த்தியம் இந்த தியாகராசனுக்கு சாத்தியமா ராமா

எதிரே பேச்சுக் கேட்டுக் கொண்டு இருப்பவனுக்கு இப்படி ஒரு நவரசம் தர பாரதி மணி அவர்களுக்கு ரொம்பவே சாத்தியம்

இன்னும் ஜாஸ்தி கேட்டுக் கொண்டிருக்கவும்.. அவர் தயாரிப்பில் ஆவக்காய் ஊறுகாய் ( சார் 3 பாட்டிலாவது .. ப்ளீஸ்) வாங்கவும் மறுபடியும் போக வேணும்

அவர் தான் எழுதிய பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகத்தை கையொப்பமிட்டுத் தந்தார்..

விடைபெற்று வீட்டுக்கு வந்து ஒரு க்ளான்ஸ் படித்தேன்.. அவர் எழுத வேண்டியதில் மிகக் கொஞ்சம் தான் எழுதியிருக்கின்றார் எனத் தோன்றுகிறது

அடுத்த வால்யூம்கள் எப்போது பாரதி மணி சார்..