Sunday 18 November 2012

க்ருஷ்ணாவதாரம்-4

"நாராயண நாராயண.. ஸ்வாமி இன்றைக்கு நான் தங்கள் தரிசனத்துக்கு காத்திருக்கும்படியாகிவிட்டது"

"அதிருக்கட்டும் நாரதா.. கம்ஸனிடம் அவன் முடிவு பற்றி சொல்லியாகிவிட்டதா"

"ஆமாம் ப்ரபோ.. நீங்கள் ஆணையிட்டபடி ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அங்கிருந்து இங்குதான் வந்தேன்"

"ஸ்வாமி.. நாரதன் வந்தால், அவனைக் கொண்டு சேஷன் தான் காரணமென்று சொல்ல வைப்பதாக சொன்னீர்கள்.. நானும் சேஷனும் அதற்கே காத்திருக்கிறோம்.. இதோ நாரதனும் வந்தாயிற்று"

"லஷ்மி.. ஏன் இந்தப் பதற்றம்.. பொறுமை.. எல்லா விளக்கமும் கிடைக்கத்தானே போகிறது"

"நாராயண நாராயண.. ஓ ஏற்கனவே என் பெயர் இங்கே பிரஸ்தாபமாகியிருக்கிறது.. என்ன சங்கதி என்று தான் தெரியவில்லை.. ஆதி சேஷா நீயாவது சொல்லக் கூடாதா"

"தேவரிஷி.. நடப்பதெல்லாம் பெருமாளின் லீலை.. ஆனால் பகவானோ நானே காரணமெனச் சொல்லுகின்றார்"

"லஷ்மி, சேஷா, நாரதா.. இப்போது நான் பேசலாமா"

" ஸ்வாமி.. அடியாள் இதைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்"

"சொல்கிறேன்.. சில தினங்களுக்கு முன்பு நான் பூலோகத்தில் அவதரிக்க வேண்டியதொரு அவசியம் வந்திருப்பதாக சேஷன் என்னிடம் சொன்னான்.. அதெப்படி சொல்கிறாய் எனக் கேட்டேன் - பஞ்சவித ஜோதிர் ஸிந்தாந்த பவர்த்த கத்வேன ஞான ப்ரகாச ஷோஸ்ய ப்ரஸித்தம் என்றும் சொன்னானப்பா அதையே சொல்லிக் கொண்டிருந்தேன்"

"நாராயண நாராயண.. சேஷா இது தான் சங்கதியா.. மனம் , வாக்கு , காயம் இதனை சுத்தி செய்ய வல்வனாயிற்றே நமது சேஷன்.. நஷத்திரம், அதனோடு கிரஹங்களுக்கு இருக்கும் சம்பந்தம், நமது சேஷனுக்கு தெரிந்த அளவுக்கு இங்கே யாருக்குத் தெரியும்.. அதிருக்கட்டும் ப்ரபோ.. எனக்கொரு ஐயம்"

"சொல் நாரதா..."

"தேவகி, வசுதேவருக்கு பிறக்க இருக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று மட்டும் சொல்லச் சொன்னீர்கள்.. ஆனால் தாங்கள் தான் அந்த எட்டாவது குழந்தையாக அவதரிக்க இருப்பதாக சொல்ல வேண்டாம் என சொல்லிவிட்டீர்களே அது ஏன் "

"மூவரும் கேளுங்கள்.. இந்த அவதாரம், கம்ஸனை வதைப்பதற்கானது மட்டுமல்ல.. இதிலே நிறைய வைபவங்கள், செய்தாக வேண்டியிருக்கிறது.. அவதாரங்களில் மிகவும் மஹத்துவம் கொண்டதான இதிலே எனக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன.."

"ஸ்வாமி அடியாளுக்கு ஆவல் மேலோங்கியிருக்கிறது"

"என்ன அது லஷ்மி சொல் எல்லோரும் தெரிந்து கொள்வோம்"

"இந்த அவதாரத்திலே தாங்களின் திருநாமம் என்னவாக இருக்கப் போகிறது"

"உங்களுக்கு பெயர் மட்டும் தெரிந்தால் போதுமா.. இல்லை எப்படி இருக்கப் போகிறேன் என்றும் தெரிய வேண்டுமா"

"ப்ரபோ இதென்ன கேள்வி.. ஆவலைத் தூண்டி விட்டு, பின் ஏமாற்றம் தரும் வகைக்கு இஃது என் மாயை எனச் சொல்ல மாட்டீர்கள் தானே"

"சரி மூவரும் கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.. நான் சொன்ன பிறகு கண்ணைத் திறக்கலாம்"

'நாராயண நாராயண.. ப்ரபோ.. ஆவல் தாங்க முடியவில்லை... கண்ணைத் திறக்கலாமா"


'கொஞ்சம் பொறுங்கள்... இப்போது திறக்கலாம்"

ப்ரும்மாண்ட உருவமில்லை.. கையிலே சார்ங்கமில்லை, சுதர்சனமில்லை. பாஞ்சஜன்யம் இல்லை, கௌமேதகம் இல்லை.. பத்மம் இல்லை.. ஏன் திருமார்பை அலங்கரிக்கும் துளசியுமில்லை.

ஆனாலும் மூவரும் அப்படியே லயித்துப் போயிருந்தார்கள்.. 

அவர்கள் எதிரே ஒரு சின்னக் குழந்தை நின்று கொண்டிருந்தது.. கார்மேக வர்ணம்.. கையிலே குழல், தலையிலே மயிற் பீலி, பட்டுத் துணி.. ஆனாலும் மேலாடை இல்லை.மார்பிலே சின்னதாக இரண்டு முத்து மாலைகள் அத்தனை தான் அலங்காரம் 

லோகத்திலிருக்கும் ரம்மியமெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு சின்னக் குழந்தையாக மாறியிருந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டால் இப்படி இருக்கும் என்று மாஹால்ஷ்மி, சேஷன், நாரதன் மூவரும் கை நீட்டி சொல்லியிருப்பார்கள்

இப்போதும் கை நீட்டி மூவரும் ஒன்று சேர குரல் தந்தார்கள், " ப்ரபோ.. ப்ரபோ... ப்ரபோ.. இந்தக் குழந்தையாகவா அவதரிக்கின்றீர்கள்.. இந்த திரு அவதாரம் என்ன பெயர் பெறவிருக்கிறது"

அந்தக் குழந்தை மிகச் சிவந்த உதடுகளைக் குவித்து பழிப்புக் காட்டி விட்டு, களுக் களுக் என்று சிரித்து விட்டு , மழலைக் குரலில்,,, க்ருஷ்ணாவதாரம் ... அதிருக்கட்டும் வாருங்கள் பூலோகத்திலே கம்ஸன் என்ன செய்கிறான்  என கவனிக்கலாம்.. இனிமேல் தான் நிறைய காரியங்கள் இருக்கிறது " என்று சொல்லியது

(தொடரும்)

No comments: