Monday 26 November 2012

க்ருஷ்ணாவதாரம்-5

கம்ஸன் இப்போது மிகவும் ஆவேசம் கொண்டவனாகவும், அடுத்து நடக்க வேண்டியதான காரியங்களை மள மள என்று செய்து கொண்டிருப்பவனாகவும் இருக்கிறான்

"யாரங்கே "

சேவகன் ஒருவன் ஓடி வந்து தண்டனிட்டு நின்றான்

" வாயிலில் காத்திருக்கும் ரதங்கள் எல்லாம் அரண்மனையின் பின் புறம் செல்லச் சொல்லு.. ஒரே ஒரு ரதம் மட்டும் நிற்கட்டும். சேனாதிபதி... எங்கே போனாய்...."

கம்சனின் ஆத்திரம் கொப்பளித்து எழும்பி, வார்த்தைகளாக ஆணைகளாக அந்த சபா மண்டபத்தினை நிறைத்தது..

"இதோ என் தங்கை தேவகியை கொலைக் களத்துக்கு அழைத்துப் போய், சிரச்சேதம் செய்து விடுங்கள்.. எப்படி குழந்தை பிறந்து வந்து என்னைக் கொல்வதென்பதைப் பார்த்து விடுகிறேன்"

கம்ஸனின் தகப்பனார் உக்கிரசேனன் அவனை நெருங்கி," கைகளைப் பிடித்துக் கொண்டு, மகனே.. இதென்ன கோரம்.. உன் நாவிலிருந்தா இப்படி வார்த்தைகள் வருகின்றன.. என்னால் நம்ப முடியவில்லை.. இதெல்லாம் கனவாகத்தான் இருக்க வேண்டும்"

"அப்பா இது கனவல்ல.. நிஜம்.. நிஜமே.. என்ன தயக்கம் .. இழுத்துப் போ தேவகியை"

அந்தக் காவல் வீரன் தேவகியை சமீபித்து செல்லும் போது வசுதேவர் , சற்றே மறிப்பது போல நின்று கொண்டு, கம்சனை நோக்கி இரண்டு கரங்களையும் யாசிக்கும் பாவனையில் நீட்டிக் கொண்டு,

" மன்னர்க்கெல்லாம் மன்னா .. எங்களுக்குப் பிறக்கும் குழந்தை எப்படி உங்களைக் கொல்லும் அது .. உங்களுக்கு மருமகளாகவோ மருமகனாகவோ அல்லவா ஆகிறது.. நீங்கள் தூக்கி கொஞ்சி மகிழும் குழந்தை.. அதெப்படி கொல்லும்.."

" இதோ பார்.. உன் கோரிக்கையெல்லாம் என்னிடம் எடுபடாது.. கொண்டு செல். வீரனே.. இன்னும் ஒரு விநாடி தாமதம் செய்தாயானால் என்ன செய்வேன் என எனக்குத் தெரியாது"

இப்போது வசுதேவர் இன்னும் கெஞ்சும் குரலில், " மன்னருக்கு இன்னும் மனமிரங்கவில்லையா.. எங்களுக்கு பிறக்கும் குழந்தைகளை நானே கொண்டு வந்து உங்கள் காலடியில் போடுகிறேன்.. தேவகி ஒரு பாவம் அறியாதவள்.. அவளை விட்டு விடுங்கள்" 

கம்சன் இப்போது முன்னும் பின்னும் நடக்கலானான்.

" சரி.. உங்கள் இருவருக்கும் உயிர் பிச்சை தருகிறேன்.. ஆனால் ஒரு நிபந்தனையுடன்.. நீங்கள் இருவரும் கைதிகளாக கஜராஜ அரண்மனையில் மிகவும் கடும் காவலுடன் சிறை வைக்கப்படுகின்றீர்கள்.. அங்கே தான் உங்களுக்கு எல்லாம்.. .. வசுதேவரே.. நீர் இப்போது சொன்னீர்கள் அல்லவா.. அது போல உங்கள் குழந்தை பிறந்த மறு கணம் அது என்னிடம் வர வேண்டும்.. அது பிறந்த நேரம் தொடங்கி, என் பார்வைக்கு வரும் நேரம் வரை தான் அதன் ஆயுள்.. என் கைக்கு வந்ததும் அதனை எமனுலகம் அனுப்புவேன்.. அக்ரூரா... கஜராஜ அரண்மனையில் காவல் அதிகம் செய்ய வேண்டும்"

சில வருஷங்கள் கடந்து போயிருந்தன.. தேவகியின் இரண்டு குழந்தைகளை அதன் மாமன் கம்சன் எமனுலகம் அனுப்பியிருந்தான்.. யதுகுலத்தினரிடையே உண்டான போரட்டத்தையும் அடக்கியிருந்தான்.. எட்டாவது குழந்தைக்கு அவனது வெறி அடங்கா மனது காத்திருந்தது

அன்றைக்கு அரண்மனையிலே, சபா மண்டபத்திலே முக்கியமானதொரு ராஜ்ஜிய ஆலோசனையில் இருந்தான்.. இரண்டு மந்திரிகள் அவனிடம் சம்பாஷித்துக் கொண்டிருந்த சமயம்.. மண்டப வாயிலில் சேவகன் ஒருவன் மணடியிட்டு மன்னனின் கவனத்தைக் கவர்ந்தான்.


கம்சன் கம்பீரமாக தலை அசைத்து அவனை அருகே அழைத்தான்..

சேவகன் தாள் பணிந்து , "ராஜாதி ராஜ சமூகத்தினை நாடி ஹஸ்தினாபுரத்திலிருந்து தூதுவன் ஒருவன் வந்திருக்கிறான்'

"வரச் சொல்"

தூதன் வணங்கிவிட்டு, "மன்னா நான் கங்கை மைந்தர். மஹா வீரர் பீஷ்மரின் சொற்களைத் தாங்கி வந்திருக்கிறேன்.."

"விஷயத்தைச் சொல்"

" தங்கள் தங்கையையும் மாப்பிள்ளை வசுதேவரையும் , பீஷ்மர் தனது விருந்தினராக அழைத்துப் போக பிரியப்படுகிறார்.. அதன் பொருட்டு என்னை இங்கே தூது அனுப்பியிருக்கிறார்"

கம்சனின் கோபம் தலைக்கு ஏறியது..

சிம்மாசனத்தினைப் பின்னுக்குத் தள்ளி எழுந்தான்.. ஆனால் அவனது மந்திரிமார்கள் அவனை சைகயால் அமைதி செய்து விட்டு அவனிடத்திலே வந்து, "பிரபோ இது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய சங்கதி.. இதிலே சினம் கொண்டால் பின்னர் நமக்கே இடைஞ்சல் வரலாம்.. பீஷ்மர் மஹா வீரர்.. அவரது பகை நம்மை அழித்து விடும்.. இந்த தூதுவனுக்கு நாளை பதில் சொல்வதாக சொல்லி, விருந்தினர் அரண்மனைக்குப் போய் ஓய்வெடுக்கச் சொல்லுங்கள்..

நாளை சூரியோதத்திற்குள் இந்த தூதுவனுக்கு நல்ல பதில் சொல்வதற்கு என்ன உபாயம் என்பதை யோசித்து விடலாம்"

அரண்மனை மேன்மாடத்திலே அந்தரங்கமானவர்களுடன் கம்சன் ஆலோசனை தொடங்கினான்.. அடிவானத்திலே நிலவு வந்திருந்த நேரம் தொடங்கின சம்பாஷணை.. நிலவு சற்றேறக்குறைய நடுவானத்திற்கு வந்திருந்தது.. கருமை நிறைந்த இரவானபடியால் நஷத்திரங்கள் அதிகம் காட்சிக்குத் தெரிந்தன.. 

கம்சனின் மனதிலே அந்த திட்டத்தின் முதல் வித்து உதித்தது.. அதனால் என்னவோ நிலவு அந்த சமயம் .மிகவும் கறுத்திருந்த மேகத்தின் பின்னே பயந்து ஒளிந்து கொண்டது போலிருந்தது

(தொடரும்)


Sunday 18 November 2012

க்ருஷ்ணாவதாரம்-4

"நாராயண நாராயண.. ஸ்வாமி இன்றைக்கு நான் தங்கள் தரிசனத்துக்கு காத்திருக்கும்படியாகிவிட்டது"

"அதிருக்கட்டும் நாரதா.. கம்ஸனிடம் அவன் முடிவு பற்றி சொல்லியாகிவிட்டதா"

"ஆமாம் ப்ரபோ.. நீங்கள் ஆணையிட்டபடி ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அங்கிருந்து இங்குதான் வந்தேன்"

"ஸ்வாமி.. நாரதன் வந்தால், அவனைக் கொண்டு சேஷன் தான் காரணமென்று சொல்ல வைப்பதாக சொன்னீர்கள்.. நானும் சேஷனும் அதற்கே காத்திருக்கிறோம்.. இதோ நாரதனும் வந்தாயிற்று"

"லஷ்மி.. ஏன் இந்தப் பதற்றம்.. பொறுமை.. எல்லா விளக்கமும் கிடைக்கத்தானே போகிறது"

"நாராயண நாராயண.. ஓ ஏற்கனவே என் பெயர் இங்கே பிரஸ்தாபமாகியிருக்கிறது.. என்ன சங்கதி என்று தான் தெரியவில்லை.. ஆதி சேஷா நீயாவது சொல்லக் கூடாதா"

"தேவரிஷி.. நடப்பதெல்லாம் பெருமாளின் லீலை.. ஆனால் பகவானோ நானே காரணமெனச் சொல்லுகின்றார்"

"லஷ்மி, சேஷா, நாரதா.. இப்போது நான் பேசலாமா"

" ஸ்வாமி.. அடியாள் இதைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்"

"சொல்கிறேன்.. சில தினங்களுக்கு முன்பு நான் பூலோகத்தில் அவதரிக்க வேண்டியதொரு அவசியம் வந்திருப்பதாக சேஷன் என்னிடம் சொன்னான்.. அதெப்படி சொல்கிறாய் எனக் கேட்டேன் - பஞ்சவித ஜோதிர் ஸிந்தாந்த பவர்த்த கத்வேன ஞான ப்ரகாச ஷோஸ்ய ப்ரஸித்தம் என்றும் சொன்னானப்பா அதையே சொல்லிக் கொண்டிருந்தேன்"

"நாராயண நாராயண.. சேஷா இது தான் சங்கதியா.. மனம் , வாக்கு , காயம் இதனை சுத்தி செய்ய வல்வனாயிற்றே நமது சேஷன்.. நஷத்திரம், அதனோடு கிரஹங்களுக்கு இருக்கும் சம்பந்தம், நமது சேஷனுக்கு தெரிந்த அளவுக்கு இங்கே யாருக்குத் தெரியும்.. அதிருக்கட்டும் ப்ரபோ.. எனக்கொரு ஐயம்"

"சொல் நாரதா..."

"தேவகி, வசுதேவருக்கு பிறக்க இருக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று மட்டும் சொல்லச் சொன்னீர்கள்.. ஆனால் தாங்கள் தான் அந்த எட்டாவது குழந்தையாக அவதரிக்க இருப்பதாக சொல்ல வேண்டாம் என சொல்லிவிட்டீர்களே அது ஏன் "

"மூவரும் கேளுங்கள்.. இந்த அவதாரம், கம்ஸனை வதைப்பதற்கானது மட்டுமல்ல.. இதிலே நிறைய வைபவங்கள், செய்தாக வேண்டியிருக்கிறது.. அவதாரங்களில் மிகவும் மஹத்துவம் கொண்டதான இதிலே எனக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன.."

"ஸ்வாமி அடியாளுக்கு ஆவல் மேலோங்கியிருக்கிறது"

"என்ன அது லஷ்மி சொல் எல்லோரும் தெரிந்து கொள்வோம்"

"இந்த அவதாரத்திலே தாங்களின் திருநாமம் என்னவாக இருக்கப் போகிறது"

"உங்களுக்கு பெயர் மட்டும் தெரிந்தால் போதுமா.. இல்லை எப்படி இருக்கப் போகிறேன் என்றும் தெரிய வேண்டுமா"

"ப்ரபோ இதென்ன கேள்வி.. ஆவலைத் தூண்டி விட்டு, பின் ஏமாற்றம் தரும் வகைக்கு இஃது என் மாயை எனச் சொல்ல மாட்டீர்கள் தானே"

"சரி மூவரும் கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.. நான் சொன்ன பிறகு கண்ணைத் திறக்கலாம்"

'நாராயண நாராயண.. ப்ரபோ.. ஆவல் தாங்க முடியவில்லை... கண்ணைத் திறக்கலாமா"


'கொஞ்சம் பொறுங்கள்... இப்போது திறக்கலாம்"

ப்ரும்மாண்ட உருவமில்லை.. கையிலே சார்ங்கமில்லை, சுதர்சனமில்லை. பாஞ்சஜன்யம் இல்லை, கௌமேதகம் இல்லை.. பத்மம் இல்லை.. ஏன் திருமார்பை அலங்கரிக்கும் துளசியுமில்லை.

ஆனாலும் மூவரும் அப்படியே லயித்துப் போயிருந்தார்கள்.. 

அவர்கள் எதிரே ஒரு சின்னக் குழந்தை நின்று கொண்டிருந்தது.. கார்மேக வர்ணம்.. கையிலே குழல், தலையிலே மயிற் பீலி, பட்டுத் துணி.. ஆனாலும் மேலாடை இல்லை.மார்பிலே சின்னதாக இரண்டு முத்து மாலைகள் அத்தனை தான் அலங்காரம் 

லோகத்திலிருக்கும் ரம்மியமெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு சின்னக் குழந்தையாக மாறியிருந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டால் இப்படி இருக்கும் என்று மாஹால்ஷ்மி, சேஷன், நாரதன் மூவரும் கை நீட்டி சொல்லியிருப்பார்கள்

இப்போதும் கை நீட்டி மூவரும் ஒன்று சேர குரல் தந்தார்கள், " ப்ரபோ.. ப்ரபோ... ப்ரபோ.. இந்தக் குழந்தையாகவா அவதரிக்கின்றீர்கள்.. இந்த திரு அவதாரம் என்ன பெயர் பெறவிருக்கிறது"

அந்தக் குழந்தை மிகச் சிவந்த உதடுகளைக் குவித்து பழிப்புக் காட்டி விட்டு, களுக் களுக் என்று சிரித்து விட்டு , மழலைக் குரலில்,,, க்ருஷ்ணாவதாரம் ... அதிருக்கட்டும் வாருங்கள் பூலோகத்திலே கம்ஸன் என்ன செய்கிறான்  என கவனிக்கலாம்.. இனிமேல் தான் நிறைய காரியங்கள் இருக்கிறது " என்று சொல்லியது

(தொடரும்)

Friday 16 November 2012

க்ருஷ்ணாவதாரம்-3

தன் விதியைக் குறித்து நாரதர் சொன்னதும், கம்சனுக்கு முதலில் குப்பென்று வியர்த்து தான் போனது. 

"நிறுத்துங்கள்.. இந்த ஆட்டம் கொண்டாட்டம் , சங்கீதம் எல்லாம் நிற்கட்டும்.. யாரங்கே "

கிட்டத்தட்ட முழங்கினான் என்றே தான் சொல்ல வேண்டும்.

நாரதர் வந்ததையோ, அவர் கம்சனின் மரணம் குறித்து சொன்ன செய்தியையோ , அந்த சபா மண்டபத்திலே இருந்த இன்னொருத்தரும் கேட்டிருக்கவில்லை.. எல்லோருக்கும் கம்சனின் கோபம் கொப்பளிக்கும் கண்களின் மீது கவனமாக இருந்தது.

சிலர் கம்சனை நெருங்கி, என்னவென விசாரிக்கலாம் எனத் தலைப்பட்டார்கள். அவர்களை கம்சன் நிமிர்ந்து உற்று நோக்கி பார்வையாலேயே , "நில்லுங்கள்" என்று சொல்வது போல் பார்த்தான்.

கம்சனின் தந்த உக்கிரசேனன் கம்சனை நெருங்கி, " குழந்தாய்.. கம்சா.. ஏன் இந்த பதற்றமும் , கோபமும் .. என்ன நடந்தது.."

"விபரமாகச் சொல்ல வேண்டுமா.. கையிலே தம்பூர் வைத்துக் கொண்டு, எப்போது பார்த்தாலும் நாராயண நாமம் சொல்லிக் கொண்டு லோகமெல்லாம் சுற்றிவருவாரே.. தேவரிஷி நாரதர்ர்ர்ர்ர்ர்ர்ர், அவர் என் முன்னே தோன்றி, இதோ இந்த யது குல திலகம் வசுதேவனை  மணந்து கொண்டு உல்லாசமான வாழ்க்கைக்குத் தயாராக இருக்கிறாளே உங்கள் ஆசை மகள் தேவகி, இவர்களின் எட்டாவது குழந்தை என்னைக் கொன்று விடுமாம் ... சொல்லிவிட்டு அதோ அந்த வானத்திலே கரைந்து போனார் அந்த தேவ ரிஷி"

கம்சனின் கை சென்ற திசையிலே உக்கிரசேனனின் கண் ஒரு தரம் அரண்மனை முற்றத்தின் வழியே , மிக சொற்பமாக தெரிந்த ஆகாசத்தைப் பார்த்து திரும்பியது.. 

அவரது முதுமைக்கு கம்சனின் இந்த ஆவேசம் கொஞ்சம் அதிகமானதாகத்தான் இருக்க வேண்டும்.. பக்கத்திலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டு, நிற்கவும் முடியாமல் தடுமாறினார்.. ஒரு சேவகன் விரைந்து வந்து, ஆசனம் ஒன்றை போட்டுவிட்டு, " பிரபோ.. அமர்ந்து கொள்ளுங்கள் " என்று சேவித்து நின்றான்.

அந்த கோலாகலமான விருந்து அப்படியே நின்று போயிருந்தது.. மீண்டும் உக்கிரசேனன் புதல்வனைப் பார்த்து கேட்டார்,

"குழந்தாய் கம்சா.. நாரதர் சொன்னது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது.. தேவரிஷி வேறெந்த விபரமும் சொல்லவில்லையா"

இவர்கள் இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரம் , தேவரிஷி, வைகுண்டத்தில், ஶ்ரீ ஹரியின் தரிசனத்துக்கு காத்திருந்தார்.

அக்கறையாக துவாரபாலகர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார், " என்றைக்கும் பெருமான் என்னைக் காக்க வைத்தது கிடையாது.. என்றைக்கும் இல்லாத அதிசயமாக இன்றைக்கு நீங்கள் என்னைக் காத்திருக்க வைத்திருக்கின்றீர்கள்"

"மன்னிக்க் வேண்டும் தேவரிஷி,, நாங்களாக எதுவும் சொல்வதில்லை, பரமாத்மாவின் ஆணையினை நிறைவேற்றுகின்றோம்"

'ம்ம்ம் புரிகிறது.. நான் அதோ அப்படி நிற்கின்றேன்.. ஆணை வந்ததும் சொல்லுங்கள்"

"ப்ரபோ.. இதென்ன விளையாட்டு.. நாரதன் வந்திருக்கிறான்.. உங்களைத் தரிசிக்க அவனை அழைத்து  ஆசிர்வதிக்காமல் காத்திருக்க வைத்திருக்கின்றீர்கள்"

" மஹாலஷ்மி.. இதில் என்னுடைய காரியம் எதுவுமில்லை.. இதோ நம்மிருவரையும் மெத்தை போலத் தாங்கி, குடை பிடித்துக் கொண்டிருக்கின்றானே.. சேஷன். இவன் செய்யும் வேலை இது"

"ப்ரபோ.. இதென்ன உங்கள் லீலைகளுக்கு என்னைக் காரணம் சொல்லுகின்றீர்கள்....பாருங்கள் மாதா என்னை சந்தேகமாகப் பார்க்கின்றார்கள்"

"ஆதிசேஷா.. நீ தானேயப்பா கிரஹங்கள், அவை நல்கும் பலாபலன்களை வைத்து அன்றைக்கு என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாய்"

"ப்ரபோ.. இதென்ன.. நீங்களும் சேஷனும்.. என்னை விட்டு விட்டு நிறைய விஷயங்கள் பேசுகின்றீர்கள் போலிருக்கிறதே"

" மஹா லஷ்மி, சேஷா நீங்கள் சற்று காத்திருங்கள்.. இதற்கு நாரதன் தான் சரியான விளக்கம் சொல்லக் கூடும்.. அவனை அழைக்கிறேன்"

(தொடரும்)

Monday 12 November 2012

க்ருஷ்ணாவதாரம் -2

அரண்மனை கோலாகலம் கொண்டிருந்தது.. மேல் மாடத்திலே அனைத்து தூண்களிலும் கதம்பமாக பூக்கள் சுற்றப்பட்டிருந்தது.. ராத்திரி நேரத்திலே அரண்மனையினைப் பார்த்தவர்கள் இது தேவேந்திரனின் அரண்மனையாகத்தான் இருக்க வேண்டும் என்பதாகப் பேசிக் கொண்டார்கள். அப்படியாக தீபங்களை வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள்.

வ்ருஷ்ணி தேசத்திலே இப்படி ஒரு கோலாகலக் கொண்டாட்டம் நடந்ததில்லை என்பதே எங்கும் பேச்சாக இருந்தது.. அரண்மனை மட்ட
ுமல்ல... தலைநகரமான மதுரா எங்கும் விழாக் கோலம் காணப்பட்டது..

அரண்மனையின் முன் மாடத்திலே இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டதொரு ரதம் த்யாராக நின்று கொண்டிருப்பதைப் பார்க்கின்ற போது, யாரோ முக்கியஸ்தர் வெளியிலே கிளம்ப் இருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது..ரத சாரதி, அந்த அஸ்வங்களுக்கு போதுமான தீனியும் , குடிக்க ஜலமும் தந்து தயார் செய்திருக்க வேண்டும். அவை ரதத்திலே பூட்டப்பட்டிருப்பதனாலோ, நீண்ட பிரயாணத்திலே நில்லாமல் ஓட வேண்டும் என்ற காரியத்தினாலோ சோர்வு கொண்டதாகத் தெரியவில்லை .. மாறாக வெகு உற்சாகமாக துள்ளியபடி இருந்தன.. அந்த குதிரைகள் அரண்மனை வாசலைலைப் பார்ப்பதும் பின்னர் கொஞ்சம் ஏமாற்றம் கொள்வதும், அதன் பின்னர் சுபாவமாகத் துள்ளுவதுமாக இருந்தன..

ரதசாரதியும் வாசலைப் பார்த்தபடி இருந்தான்.. அரண்மனையின் வெளியிலேயிருந்த தோட்டத்திலே வேலை செய்து கொண்டிருந்தவர்களும், வாசலைப் பார்ப்பதாகவே இருந்தார்கள்

வருகை அற்வித்து கட்டியம் கூறுகின்றவன் கூட அந்த ப்ரம்மாண்ட கதவுகளின் பக்கத்திலே நின்று கொண்டிருக்கிறார்.. காற்று லேசாக வீசிக் கொண்டிருந்தபடியால், அந்தக் கதவுகளில் வேலைப்பாடாகக் கோர்க்கப்பட்டிருந்த சின்ன மணிகள் அசைந்து, டிங் டிங் என்று ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன.. சில சமயம் எல்லா மணிகளும் ஆடி சப்தமெழுப்புகின்ற மாதிரி காற்றானது வேலை செய்தது

இருபது குதிரை வீரர்கள் முன்னேயும், நாற்பது ரதங்களில் சீதனங்கள் பின் தொடரவும், பிரதான ரதம் நடுவிலேயுமானதாக அந்தப் பவனி அரண்மனையினை விட்டுக் கிளம்பத் தயாராக இருக்கிறது..

வாத்தியக் கோஷ்டியினர் மங்கள இசையினை வெகு ரசனையுடன் வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள்

அரண்மனையின் உள்ளே, விருந்து தடபுடலாக இருக்கிறது.. பக்கத்து தேசத்திலிருந்தெல்லாம், ராஜாக்கள் வந்திருந்தார்கள்..

அவர்களெல்லாம் மஹாராஜா கம்சனின் ஆப்த சிநேகிதர்கள்.. கம்சனின் தங்கை தேவகியின் திருமணத்திற்கு வாராதிருப்பார்களா.. திருமணம் நேற்றே முடிந்துவிட்டது.. இன்றைக்கு விருந்து முடிந்து தேவகி, தன் புருஷன் வீட்டுக்கு கிளம்புகிறாள்.

எந்த தேசத்து ராஜாவோ கம்சனின் காதுகளில் என்னமோ ஹாஸ்யமாகச் சொல்லியிருக்க வேண்டும்

கம்சனின் பரிகாசச் சிரிப்பு வெடித்துக் கிளம்பி காற்றிலே கலந்து கொண்டிருந்தது..

இந்தக் கணத்திலே அந்த இடத்திலே தேவ ரிஷியான நாரதர் தோன்றினார்.

"வருக வருக தேவ ரிஷி வருக.. உங்கள் வருகையால் இந்தக் கம்சன் மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாகிறான். நீங்கள் என் தங்கை தேவகியையும் மாப்பிள்ளை வசுதேவரையும் ஆசிர்வதிக்க வேண்டும்.."

"அதெற்கென்ன கம்சா.. என் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு.. நீ தான் ஜாக்கிரதையாக இருக்க வேணும்.. அதைச் சொல்லவே நான் வந்தேன்..... நாராயண நாராயண"

"எனக்கென்ன வந்தது தேவ ரிஷி அவர்களே.. என்னை நெருங்க துணிவுள்ளவுள்ளவன் பூவுலகில் இருக்கின்றானா என்ன"

" நீ இப்படி நினைத்துக் கொள்வது தான் ஆபத்து கம்சா.. இதோ புது மணப்பெண்ணாக சிரித்துக் கொண்டிருக்கின்றாளே உன் தங்கை தேவகி.. அதோ பிரமுகர்களிடம் விநயமாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே யது குல மன்னர் ,, உன் மாப்பிள்ளை வசுதேவர்.. இவர்களுக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை.. உன்னைக் கொல்வான்.. அவனே உனக்கு எமன்"

இந்த வாக்கியம் முடிந்து போன போது கம்சனின் பதிலுக்கு காத்திருக்காமல் நாரதர் அந்த இடத்திலிருந்து மறைந்தார்..

கம்சன் முகம் இறுகியிருந்தது...

காற்றும் அவன் என்ன செய்யப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள கொஞ்ச நேரம் அசையாமல் நின்று போயிருந்தது

(தொடரும்)

Sunday 11 November 2012

க்ருஷ்ணாவதாரம் -1

க்ருஷ்ணரைக் குறித்த ஏராளனமான செவி வழிக் கதைகள், குழந்தைகளுக்கு சோறூட்டும் போது சொல்லப்படும் தந்திரங்கள் நிறைந்த கதைகள். தத்துவ உலகில் பகவத் கீதை குறித்த ஆராய்ச்சிகள், விவாதங்கள், பண்டிகைக் காலங்களில், காலட்சேபங்களில் சொல்லப்படும் கதைகள்

இந்தியாவில் க்ருஷ்ணன் புராணம் கலந்த அதிசயம்.. இந்த பரந்த தேசத்திலே பல தரப்பட்ட கலாச்சாரங்களில் கலந்திருக்கும் ஆச்சரியம் க்ருஷ்ணன்..

நான் வாசிக்கின்ற பொழுதெல்லாம் புதியதும், பரவசம் தரக்கூடியதுமான க்ருஷ்ண வைபவங்களை நினைத்து நினைத்து சந்தோஷிக்கின்றேன்.

பிள்ளைப் பிராயத்து விளையாட்டு, அரசியல் நிகழ்வுகளை நடத்தி வைத்தவன், பெரும் தத்துவ உரைக்கு ஆசிரியன்.

இரிஞ்சாலக்குடா எனும் கேரள நாட்டு ஊரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கக் கூடும் ( ஐ , ஜி ஆர் மரார் எனும் போலிஸ் அதிகாரி பாத்திரம் நினைவுக்கு வரலாம்.. அந்தப் பெயரில் வரும் ஐ .. குறிக்கும் ஊர் இரிஞ்சாலக்குடா !!!!!)

இந்த இடத்திலிருக்கும் ரயிலடிக்குப் பக்கத்திலே திருக்காட்கரை எனும் திவ்ய தேசமிருக்கிறது.. அங்கே நின்ற திருக்கோலத்திலே சேவை சாதிக்கும் பெருமாள் காட்காரையப்பன்)

இந்தப் பெருமாளை பாசுரம் பாடி மகிழும் நம்மாழ்வாரைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்


என்கண்ணன்கள்வம் எனக்குச் செம்மாய்நிற்கும்

அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது

புன்கண்மையெதிப் புலம்பியிராப்பகல்

என்கண்ணனென்று அவன்காட்கரையேத்துமே.

ஒருவன் கள்ளத்தனம் செய்கிறான்,, சூதுவாது செய்கிறான் என்றால் அவனை விட்டு விலகி நிற்க வேண்டாமா.. ஆனால் இந்த கள்ளத்தனம் கொண்ட கண்ணனை ராப்பகலாக நினைத்து தான் கரையேற வேண்டும்

நம்மாழ்வாரை மிஞ்சி சொல்ல என்ன இருக்கப் போகிறது

இரண்டு தினங்களில் தீபாவளி இருக்க, இந்த க்ருஷ்ணாவதாரம் தொடரை தொடங்குகிறேன்

இந்த பதிவு அறிமுகம் தான்.. கதையின் முதல் பதிவு... தீபாவளி கழித்து தொடங்குகிறேன்